பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கம் கிராமத்தில் பழனிமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகை கடை வைத்து நடத்தி வரும் ராம்குமார் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 14.1.2016 அன்று ராம்குமார் மல்லிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து ராம்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் ராம்குமாரின் தாயார் புஷ்பா தனது மகனின் இறப்பிற்கு நஷ்ட ஈடு வேண்டும் என கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் நஷ்ட ஈடு வழங்கவில்லை. இதனால் புஷ்பா செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் கட்டளை நிறைவேற்றும் மனுவை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த சார்பு நீதிபதி குமரவர்மன் நஷ்ட ஈடு தொகையை அசலும் வட்டியுமாக சேர்த்து 14 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டார் . ஆனால் இதுவரை எந்த ஒரு தொகையும் வழங்கவில்லை. இதனால் நீதிபதி நஷ்ட ஈடு வழங்காத அரசு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி இன்று செய்யாறு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அந்த அரசு பேருந்தை அதிகாரிகள் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்
Post Views:
0