தமிழ் சினிமாவில் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இவர் தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். அதனை தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிக்கும் “சியான் 61” படத்தை இயக்குகிறார். இந்நிலையில் பா.ரஞ்சித் தயாரிப்பில் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் மற்றும் லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் பா. ரஞ்சிதிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெயக்குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு தமிழழகன் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்த இசையமைக்கிறார். இப்படத்தின் திரைக்கதை வசனத்தை தமிழ் பிரபா மற்றும் ஜெயக்குமார் எழுதுகின்றனர். மேலும் இப்படம் குறித்து அடுத்தடுத்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Views:
0