ஈரோடு மாநகராட்சியில் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பது குப்பை பிரச்சனையாகும். 60 வார்டுகளில் இந்த பிரச்சனை இருக்கிறது. வெயில் காலங்களில் குப்பை காற்றில் பறந்து சிரமம் ஏற்படுத்துவதும், மழைக்காலத்தில் கழிவுகள் சாக்கடையை அடைத்து பிரச்சினை ஏற்படுத்துவதும் தொடர்கதையாக உள்ளது. அதனை தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி நிர்வாக சார்பில் குப்பை சேகரிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தாலும் வீதிகளின் ஓரத்திலும் குடியிருப்புகளை ஒட்டிய காலிடங்களிலும் குப்பைகள் குவிந்து வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை. ஆனால் கடந்த ஒரு ஆண்டுகளாக ஈரோடு மாநகராட்சி குப்பைத் தொட்டி இல்லாத மாநகராட்சி மாற்ற வேண்டும் என்று நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வீதிகளின் ஓரத்தில் வழக்கமாக குப்பைகள் போடு இடங்களை மாநகராட்சி பணியாளர்கள் தூய்மை செய்வதுடன், மகளிர் குழுக்கள் மூலம் வண்ணக் கோலங்கள் போடப்பட்டது. இது ஓரளவு வெற்றியை கொடுத்தது. இருப்பினும் குடியிருப்புகளை ஒட்டி உள்ள காலியிடங்கள், நீர்நிலைகளில் குப்பை கொட்டுவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் குப்பை சேர்வதை தடுக்க புதிய முயற்சி ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் எடுத்துள்ளது. அதன்படி ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என்ற வாசங்களுடன் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி 4 வது மண்டல உதவி ஆய்வாளர் சண்முக வடிவு மேற்பார்வையில், சுகாதாரம் அதிகாரி ஜாகிர் உசேன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் அதிக குப்பைகளை போட்டு செல்லும் பகுதியில் பிரபலங்களின் வண்ண புகைப்படங்களுடன் ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என்ற வாசகத்துடன் பிளக்ஸ்பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில் முதல்வர் ஸ்டாலின், கிரிக்கெட் வீரர் டோனி, நடிகர் வடிவேலு, நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபலங்களின் புகைப்படங்களும், அதன் அருகில் நின்று எனது குப்பை எனது பொறுப்பு என்ற வாசகத்துடன் பொதுமக்கள் செல்பி எடுத்துக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனை ஆர்வமாக பார்க்கும் பொதுமக்களும் தங்கள் செல்போன்களை செல்பி எடுத்து மகிழ்ச்சியாக செல்கிறார்கள். இது குறித்து சுகாதார அதிகாரிகள் ஜாகிர் உசேன் கூறியது, பொதுமக்கள் மத்தியில் குப்பை சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த திட்ட உதவியாக உள்ளது என்று கூறினார்.
Post Views:
0