பெட்ரோல் பங்கில் நூதன முறையில் திருட்டு…. பெண் உள்பட 2 பேர் கைது…. வலைதளங்களில் வைரலாகும் வீடியோ….!!


பெட்ரோல் பங்கில் நூதன முறையில் திருடிய பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெதப்பம்பட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நூதன முறையில் பெட்ரோல் திருடுவதாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஆணும் பெண்ணும் சேர்ந்து காருக்கு பெட்ரோல் நிரப்பும்போது அந்த ஆண் வாகனம் டிரைவரிடம் பேச்சுக் கொடுத்து கவனத்தை திசை திருப்பியுள்ளார். அந்த பெண் பின்னால் உள்ள பிளாஸ்டிக்கேனில் பெட்ரோல் திருடுகிறார். இதுகுறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெண்ணிலா குடிமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் பெட்ரோல் திருட்டில் ஈடுபட்டவர்கள் அதே பெட்ரோல் பங்கில் காசாளராக வேலை பார்த்து வந்த கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் வசிக்கும் சிலம்பரசன், சூப்பர் வைசராக வேலை பார்த்து வந்த சாந்தி என்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் பெட்ரோல் பங்கிற்கு வரும் வாடிக்கையாளர்கள் சிலம்பரசனிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். இதனையடுத்து சிலம்பரசன் பணப்பை மற்றும் சாவியை சாந்தியிடம் கொடுத்து விட்டு ஊழியர்களின் சம்பள பட்டியலை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இதனையடுத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெண்ணிலா கணக்கு பார்த்தபோது பெட்ரோல் விற்பனை செய்த பணத்தில் இருந்து ரூ.8800 குறைவாக இருந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து வெண்ணிலா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கொடிமங்கலம் காவல்துறையினர் சிலம்பரசன் மற்றும் சாந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.